×

சென்னையில் விதிமீறலில் ஈடுபட்ட 1,022 வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு; போக்குவரத்து போலீஸ் நடவடிக்கை..!!

சென்னை: சென்னையில் விதிமீறலில் ஈடுபட்ட 1,022 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகர காவல் எல்லையில் மோட்டார் வாகன சட்டப்படி வாகன பதிவு எண் பலகையில் பிரஸ், காவல், வக்கீல், டாக்டர் போன்ற வாசகங்கள் ஒட்டுவது குற்றம் என்றும், எனவே அரசு அனுமதி வழங்காக தனியார் வாகனங்களில் இதுபோன்ற ஸ்டிக்கர்கள் ஒட்டி இருந்தால் உடனே அப்புறப்படுத்த வேண்டும் என்றும் போக்குவரத்து போலீசார் ஒரு வாரம் காலம் அவகாசம் வழங்கி அறிக்கை வெளியிட்டிருந்தனர். இந்த கால அவகாசம் முடிந்த நிலையில் மே 2 முதல் சென்னை பெரு நகர காவல் எல்லையில் போக்குவரத்து போலீசார் 150க்கும் மேற்பட்ட இடங்களில் வாகன சோதனை நடத்தினர்.

இதில் வாகன பதிவு எண் பலகையில் தேவையில்லாத ஸ்டிக்கர் ஒட்டிய நபர்களை பிடித்து அபராதம் விதித்தனர். முதல் நாளில் மட்டும் அபராதமாக ரூ.2,13,500 வசூலிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 5 நாட்களில் சென்னை நகரின் முக்கிய சாலைகளில் நடந்த வாகன தணிக்கையில் 1,022 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறி வாகன பதிவுஎண் தகட்டில், ஸ்டிக்கர் ஒட்டி இருந்த 1022 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவுசெய்து ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.

வாகன பதிவு எண் தகட்டில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என சென்னை போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பிடிபட்டவர்கள் அடுத்த முறையும் விதி மீறி ஸ்டிக்கர் ஒட்டி இருந்தால், ரூ.1,500 அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. பிடிபட்டவர்கள் மட்டுமல்ல, வேறு யாராக இருந்தாலும், வாகன பதிவுஎண் தகட்டில், தேவையற்ற எந்த ஸ்டிக்கரையும் ஒட்டக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சென்னையில் விதிமீறலில் ஈடுபட்ட 1,022 வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு; போக்குவரத்து போலீஸ் நடவடிக்கை..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Metropolitan Police ,
× RELATED பந்தம் என்ற சேவையை சென்னை பெருநகர காவல்துறை தொடங்கியது!